செய்திகள்
படுகாயமடைந்த மத போதகர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடக்கும் காட்சி

கள்ளக்காதலை கண்டித்த மதபோதகருக்கு அரிவாள் வெட்டு

Published On 2019-01-23 12:32 GMT   |   Update On 2019-01-23 12:32 GMT
திண்டுக்கல் அருகே கள்ளத் தொடர்பை கண்டித்த மத போதகருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ராக்காச்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 34). மதபோதகராக உள்ளார். இவர் தனது மனைவி பிரியாவுடன் சேர்வீட்டில் வசித்து வருகிறார். இவரது சபைக்கு அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (29) என்பவர் வந்து செல்வார். அப்போது சரவணனுக்கும் பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியது.

இது குறித்து அறிந்த பாலமுருகன் தனது மனைவியையும் சரவணனையும் கண்டித்தார். இருந்தபோதும் அவர்களது பழக்கம் தொடர்ந்து நீடித்து வந்தது. இதனால் சரவணனை சபைக்கு வர வேண்டாம் என பாலமுருகன் கண்டித்தார்.

இதனைத் தொடர்ந்து சரவணன் இன்று பிரியாவை வேறு இடத்துக்கு அழைத்து பேசி வந்தார். இதை பார்த்த பாலமுருகன் ஆத்திரமடைந்து இருவரையும் சத்தம் போட்டார். இதனால் சரவணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாலமுருகனை பல இடங்களில் வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த பாலமுருகன் சத்தம் போட்டார். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பாலமுருகனை மீட்டு நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரவணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத போதகரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News