செய்திகள்

ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

Published On 2019-01-22 18:26 GMT   |   Update On 2019-01-22 18:26 GMT
ரெயில்வே காவல்துறையின் பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீசுகளை பயணிகளுக்கு வழங்கினார்கள்.
கோவை:

ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘ஜி.ஆர்.பி. ஹெல்ப் செயலி’யை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவையில் அறிமுகம் செய்தார். இந்த செயலியை ஆன்ட்ராய்டு செல்போனில் பதிவு செய்து, ரெயில் பயணிகளுக்கு பிரச்சினை மற்றும் ஆபத்து ஏற்படும்போது ரெயில்வே போலீசை தொடர்பு கொள்ள முடியும். இந்த செயலி தொடர்பான தகவல்களை என்.சி.சி. மாணவர்கள் கோவை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் ரெயில்வே காவல்துறையின் பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீசுகளையும் வழங்கினார்கள்.

அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெண்களுக்கான ரெயில் பெட்டியில் சந்தேக நபர்களோ, ஆண்களோ இருந்தால் ரெயில்வே கட்டுப்பாட்டு அறை எண் 1512, மற்றும் 99625 00500 என்ற செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம். ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து இருக்கும் பெண்கள், ஜன்னல் பக்கம் தலைவைத்து தூங்கும் பெண் பயணிகள் தங்களின் நகைகளை வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் பயணம் செய்வோர் ரெயில் பெட்டியின் கதவுகளை மூடி பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும். கழிவறை கதவுகள் நீண்டநேரமாக உட்புறமாக மூடப்பட்டு இருந்தால் போலீசுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கலாம். அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் குளிர்பானத்தையோ, தின்பண்டங்களையோ வாங்கி சாப்பிடக் கூடாது. பயணிகள் தங்களின் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News