ஆண்டிப்பட்டி அருகே முன் விரோதத்தில் முதியவரை தாக்கிய கும்பல்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே டி.சேடப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 71). அதே ஊரைச் சேர்ந்த முனிசாமி (வயது 54). ராஜனின் மகன் பால்பாண்டி. திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். பால்பாண்டிக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.
முனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி இதனை குத்திக்காட்டி ராஜனிடம் தகராறு செய்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பால்பாண்டி அவர்களை திட்டி விட்டு சென்றார். இதனை மனதில் வைத்துக் கொண்டு முனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ராஜனிடம் பிரச்சினை செய்தனர்.
சம்பவத்தன்று முனிசாமி அவரது மனைவி சீனியம்மாள் மகன் நாகேந்திரன் ஆகியோர் ராஜனை தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த ராஜனின் மனைவி மணித்தாயும் தாக்கப்பட்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து முனிசாமி மற்றும் நாகேந்திரனை கைது செய்தனர்.