செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே வி‌ஷம் குடித்ததை உறவினர்களுக்கு போனில் தெரிவித்த கொத்தனார் உயிரிழப்பு

Published On 2019-01-19 08:30 GMT   |   Update On 2019-01-19 08:30 GMT
மணவாளக்குறிச்சி அருகே வி‌ஷம் குடித்ததை உறவினர்களுக்கு போனில் தெரிவித்த கொத்தனார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்:

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை, கருங்காலிவிளையை சேர்ந்தவர் சின்னநாடார். இவரது மகன் சுதன் (வயது 27). இவர் கேரளாவில் கட்டிட வேலை செய்து வந்தார்.

சுதன் தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்தார். சபரி மலைக்கு சென்றுவிட்டு கடந்த 15-ந்தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று சுதன் வி‌ஷம் குடித்தார்.

தான் வி‌ஷம் குடித்த தகவலை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் மூலமாக கூறினார். தன்னை காப்பாற்றுமாறு கூறி சுதன் கதறி அழுதார். இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் சுதனை தேடினார்கள்.

அப்போது முட்டம் செங்குழி பகுதியில் உள்ள ரோட்டோரத்தில் சுதன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சுதன் கொண்டுவரப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே சுதன் பரிதாபமாக இறந்தார்.

இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மணவாளக்குறிச்சி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் கருங்கல் அருகே தெருவுக் கடை பகுதியை சேர்ந்தவர் காட்வின் (27). வி‌ஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காட்வின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News