செய்திகள்

திருமங்கலம் கோவில் விழாவில் மோதல்: 3 வாலிபர்கள் கைது

Published On 2019-01-18 11:21 GMT   |   Update On 2019-01-18 11:21 GMT
திருமங்கலம் கோவில் விழாவில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியில் முனியாண்டி கோவில் விழாவையொட்டி ஆடல்- பாடல் நிகழ்ச்சி நடந்தது. தொட்டியபட்டி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ரசித்தனர்.

அப்போது உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கும், தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த அய்யலுராஜ் மகன் அருண் (வயது 19) என்பவர் ‘‘எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்’’என்று திருமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

ஆனாலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய தயக்கம் காட்டியதாக தெரிகிறது. இதையடுத்து புதுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் புதுப்பட்டி கோஷ்டி மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொட்டியப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரகாஷ் (19), மார்நாடு மகன் ஜெகதீஸ்வரன் (20), அழகுமலை மகன் லட்சுமணன் (23) ஆகிய 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தவிர தப்பி ஓடி தலைமறைவான பிரிய தர்‌ஷன், கண்ணன், தர்மதுரை, திருமேனி, முருகேசன், முரளி ஆகிய 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News