வில்லியனூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை
புதுச்சேரி:
விழுப்புரம்- வளவனூர் மெயின்ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்பாபு (வயது34). இவர் கடந்த சில ஆண்டுகளாக வில்லியனூர் அருகே ஆரியப்பாளையம் அசோக்நகரில் தங்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள பாலிதீன் கவர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வெங்கடேஷ்பாபு வேலை பார்த்து வந்த தொழிற்சாலை கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் வெங்கடேஷ்பாபு வேலை இன்றி தவித்து வந்தார். மேலும் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.
இதனால் விரக்தி அடைந்த வெங்கடேஷ்பாபு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று அவர் எலி மருந்தை (விஷம்) தின்றுவிட்டு வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் மயங்கி கிடந்தார். தகவல் அறிந்த குடும்பத்தினர் வெங்கடேஷ்பாபுவை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடேஷ்பாபு பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.