செய்திகள்

கும்பகோணம் அருகே மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவர்

Published On 2019-01-16 15:10 GMT   |   Update On 2019-01-16 15:10 GMT
கும்பகோணம் அருகே குடும்ப தகராறில் மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதில் இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஏராகரம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி பிரியா (வயது 25). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

குழந்தை இல்லாததால் இளையராஜா வேதனை அடைந்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவும் கணவன்- மனைவி இடையே வழக்கம் போல் பிரச்சினை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கணவரை , பிரியா கண்டித்து பேசியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற இளையராஜா, வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து திடீரென பிரியா உடலில் ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் தீ பிடித்ததால் அவர் அலறி கூச்சல் போட்டார்.

அப்போது பிரியா, திடீரென கணவரை கட்டி பிடித்ததால் இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இதனால் உடல் கருகி கிடந்த கணவன்- மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News