குன்னத்தூரில் ஆட்டோ மோதி கல்லூரி மாணவர் பலி
குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் ஜீவா என்ற ஜீவானந்தம் (வயது 19). இவர் ஈரோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஜீவா வழக்கம்போல் கல்லூரி பஸ்சில் சென்று வந்தார்.
நேற்று கல்லூரியில் விழா நடைபெற்றது. இதற்காக தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கல்லூரி சென்றார். விழா முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
குன்னத்தூர் பெருந்துறை ரோடு தேவம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது எதிரே சரக்கு ஆட்டோ வந்தது. எதிர்பாராதவிதமாக சரக்கு ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜீவாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மாணவரை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜீவாவை பரிசோதனை செய்த டாக்டர் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கார்த்திக்குமாரை கைது செய்தனர்.