ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாத்தூரில் ஆக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட முயன்றனர். அப்போது அவ்வழியாக ரோந்து போலீசார் வாகனத்தில் வந்தனர்.
உடனே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். சந்தேகமடைந்த போலீசார் ஏ.டி.எம். மையத்திற்குள் வந்து பார்த்த போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.
சரியான நேரத்தில் போலீசார் வந்ததால் பல லட்சம் ரூபாய் தப்பியது. ஏ.டி.எம்.எந்திரத்தை மர்ம கும்பல் கடப்பாரையால் உடைத்து உள்ளனர். பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் தப்பிச் சென்றிருக்கிறார்கள்.
இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.