செய்திகள்

விடுதியில் தங்கி இருந்த கல்லூரி மாணவிகள் திடீர் சாலை மறியல்

Published On 2019-01-04 16:12 GMT   |   Update On 2019-01-04 16:12 GMT
குடிநீர் கேட்டு விடுதியில் தங்கி இருந்த கல்லூரி மாணவிகள் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:

தர்மபுரி ஒட்டப்பட்டியில் அரசு கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து மாணவிகள் தங்கி உள்ளனர். கடந்த 6 மாதங்களாக விடுதியில் குடிநீர் கிடைக்காமல் மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இதனால் மாணவிகள் குடிநீர் தேவைக்கு அருகில் அவ்வையார் நகர் பகுதிக்கு சென்று குளிக்க, குடிக்க தண்ணீரை குடத்தில் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

சரியான முறையான குடிநீர் வினியோகம் செய்ய கோரி விடுதி கல்லூரி மாணவிகள் இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விடுதி மாணவிகள் இன்று காலை சேலம்-தர்மபுரி சாலை ஒட்டிப்பட்டியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார், திட்ட உதவி இயக்குனர் ரவிசங்கரநாத், வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், கல்லூரி வணிகத் துறை பேராசிரியர் பிரபாகரன் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அரசு கல்லூரி மாணவிகள் விடுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News