வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள் மறியல்
வந்தவாசி:
வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் அமைந்துள்ளது. வந்தவாசி, மருதாடு, பிருதூர், ஒசூர், கீழ்கொடுங்காலூர், மழையூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்களுடைய விளைபொருளான நெல்லை இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இங்கு எடை போட்ட பிறகு வியாபாரிகளின் கோணிப்பைகளில் இருந்து நெல் மாற்றப்பட்டு காலி கோணிப்பைகளை அப்போதே விவசாயிகளிடம் திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக கோணிப்பைகள் விவசாயிகளுக்கு முறையாக திருப்பி கொடுக்கப்பட வில்லை என்பதுடன், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
காலி கோணிப்பைகள் திரும்ப வழங்கபடாதது, அடிப்படை வசதிகள் செய்து தரப்படாதது ஆகியவற்றை கண்டித்து விவசாயிகள் நேற்று வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் விரைந்து சென்று விவசாயிகளை சமரசம் செய்தனர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.