அண்ணாநகரில் வாலிபர் கொலை: ஒருவர் கைது
அம்பத்தூர்:
அண்ணா நகர், அன்னை சத்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 36) ரவுடி. இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடியாக இருந்த சந்தானம் கடந்த சில மாதங்களாக திருந்தி பெயிண்டிங் வேலை செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சந்தானம் பணி முடித்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சத்யா நகர் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே வந்தபோது மர்ம கும்பல் வழிமறித்து சந்தானத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இது குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியில் ரவுடிகளாக வலம் வந்தவர்களை சந்தானம் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடிகள் சந்தானம் இருந்தால் ஏரியாவில் மதிப்பு கிடைக்காது என்று எண்ணி அவரை தீர்த்துக்கட்டி இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சின்ன ராமபர்ட், ஜோசப் மற்றும் அவர்களது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே ஆந்திராவில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சதீஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.