செய்திகள்

அசோக் நகரில் மாநகராட்சி பூங்காவில் காவலாளி- மனைவி தற்கொலை

Published On 2019-01-02 07:03 GMT   |   Update On 2019-01-02 07:03 GMT
அசோக் நகரில் மாநகராட்சி பூங்காவில் காவலாளியும், அவரது மனைவியும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போரூர்:

அசோக் நகர் 48-வது தெருவில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் இருதயராஜ் (வயது61). இவரது மனைவி புஷ்பமேரி(58) இருவரும் பூங்காவில் உள்ள அறையில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல பொதுமக்கள் பூங்காவிற்கு நடைபயிற்சி செல்ல வந்தனர். அப்போது அங்குள்ள அறையில் இருதயராஜ் அவரது மனைவி புஷ்பமேரி ஆகியோர் தற்கொலை செய்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அசோக்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெயராஜ், இன்ஸ் பெக்டர் சூரியலிங்கம் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இருதயராஜும் அவரது மனைவி புஷ்பமேரியும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக இருதயராஜின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்த இருவரின் சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் கூடலூர் ஆகும். அங்குள்ள அவர்களது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் வந்த பின்னரே குடும்பத்தில் வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்பது தெரியவரும்.

மாநகராட்சி பூங்காவில் காவலாளியும், அவரது மனைவியும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News