நாகை அருகே மனைவியை கல்லால் அடித்து கொன்ற கணவன்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே எட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவருடைய மனைவி சித்ரா (வயது 45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
சம்பவத்தன்று ரவிக்கும், மனைவி சித்ராவிற்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ரவி, அருகில் கிடந்த கல்லை எடுத்து சித்ராவை தலையில் தாக்கினார். இதனால் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரவியை வலைவீசி தேடி வருகின்றனர்.