மு.க.அழகிரி பா.ஜனதாவில் சேருவாரா?- பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்பதற்காக முத்தலாக் சட்ட மசோதா பாராளு மன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
மேல்-சபையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பெண்களின் உரிமையை பாதுகாக்க முன்வராமல் எதிர்ப்பது முறையல்ல
புதுச்சேரி கவர்னர் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரசாரும், கம்யூனிஸ்டுகளும் கூறி வருகிறார்கள். மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு கிரண்பேடி முன்னுரிமை வழங்குகிறார்.
புதுச்சேரி அரசில் தலையிடாமல் தனக்கு இருக்கும் அதிகாரத்தை கொண்டு செயல்படுகிறார். அவரை திரும்பப்பெற வேண்டும் என்பது புதுச்சேரி அரசின் கையாலாகாததனம்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை கொண்டு வருவது நியாயமானது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க இந்த தடை அவசியம். அதை எதிர்க்க கூடாது.
பெட்ரோல்-டீசல் விலை ஏற்ற, இறக்கத்தை வைத்து அரசியல் நடத்த பா.ஜனதா விரும்பவில்லை. பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மு.க.அழகிரி பா.ஜனதாவில் சேரப்போவதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘பா.ஜனதாவில் மு.க.அழகிரி சேருவது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை’’ என்று கூறினார். #ponradhakrishnan #MKAzhagiri #bjp