செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வேலூர் கல்லூரி மாணவன் உடல் மீட்பு

Published On 2018-12-29 14:05 GMT   |   Update On 2018-12-29 14:05 GMT
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த போது அடித்து செல்லப்பட்ட வேலூர் கல்லூரி மாணவன் உடல் மீட்கப்பட்டது. அவனை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஒகேனக்கல்:

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்துள்ள நடு வேட்டந்தன்பட்டியை அருணாசலம். இவருடைய மகன் நவீன் (வயது18). இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நவீன் மற்றும் அவருடைய உறவினர்கள் கடந்த 27-ந் தேதி தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். அப்போது ஊட்டமலை பரிசல் துறைக்கு சென்றனர். அங்குள்ள காவிரி ஆற்றில் நவீன் உறவினர்களுடன் குளித்தபோது எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நவீனை தேடும் பணியில் பரிசல் ஓட்டிகள் உதவியுடன், தீயணைப்பு வீரர்கள் 2 நாட்களாக ஈடுபட்டனர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. பின்னர் இன்று காலை 3-வது நாளாக அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நவீனின் உடல் ஊட்டமலை பரிசல் துறை அருகே கிடைத்தது. உடனே நவீனின் உடலை பரிசல் ஓட்டிகள் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News