செய்திகள்

களக்காடு அருகே வீட்டில் மயங்கி விழுந்த பட்டதாரி பெண் பலி

Published On 2018-12-28 14:51 GMT   |   Update On 2018-12-28 14:51 GMT
களக்காடு அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பட்டதாரி பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழவடகரையை சேர்ந்தவர் மருதையா. விவசாயி. இவரது மகள் முப்பிடாதி என்ற உஷா (25) இவர் பி.காம் படித்துள்ளார். காவல்கிணற்றில் உள்ள கையுறை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிப்பு இருந்து வந்துள்ளது. 

இதற்காக உஷா பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தினசரி மருந்துகளும் சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை உஷாவிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருதையா காவல்கிணற்றில் இருந்து ஊருக்கு அழைத்து வந்தார். நேற்று காலை உஷா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீர் என மயங்கி விழுந்தார். 

உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது தந்தை மருதையா களக்காடு போலீசில் புகார் செய்தார். களக்காடு சப்- இன்ஸ் பெக்டர்கள் லிபிபாரல்ராஜ், அய்யப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News