செய்திகள்

சிறுமி பலாத்கார வழக்கில் முன்னாள் எம்எல்ஏவிற்கு 10 ஆண்டு சிறை - சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-12-28 12:07 GMT   |   Update On 2018-12-28 12:07 GMT
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ.விற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. #FormerMLARajkumar #PerambalurMLA
சென்னை:

கடந்த 2006 முதல் முதல் 2011ஆம் ஆண்டு வரை பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் ராஜ்குமார்.

2012-ல் இவர் வீட்டில் வேலை செய்த 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதாக ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கர் உள்பட சிலர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகிய 7 பேர் மீது ஆள்கடத்தல், பாலியல் வன்முறை, மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பன்னீர்செல்வம் இறந்து போனார்.

ராஜ்குமார் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி இன்று தீர்ப்பளித்தார்.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளி ஜெய்சங்கர் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், இருவரும் 42 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் மற்றவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். சிறப்பு நீதிமன்றம் அளித்த முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.  #FormerMLARajkumar #PerambalurMLA
Tags:    

Similar News