செய்திகள்
புயல் நிவாரணம் வழங்ககோரி தென்னை விவசாயிகள் உண்ணாவிரதம்- 30 பேர் கைது
பரவாக்கோட்டையில் கஜா புயல் நிவாரணம் வழங்ககோரி தென்னை விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
மன்னார்குடி:
கஜா புயலால் பாதிக்கப்பட்டு 40 நாட்களாகியும் பரவாக்கோட்டை பகுதி தென்னை விவசாயிகளுக்கு பொதுமக்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை. கணக்கெடுப்பையும் பெயரளவில் மேற்கொண்டு தங்கள் கிராமம் புறக்கணிக்கபடுவதாக கூறி விவசாயி ரவிச்சந்திரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.
இதில் அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் டாக்டர் வி.திவாகரன் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன் உரிய நிவாரணம் இதுவரை வழங்காமல் இந்த பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்புவதோடு நேரிலும் சந்தித்து அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க வலியுறுத்த போவதாகவும் கூறினார்.
பின்னர் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி தலைமையிலான போலீசார் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக கூறி அவர்களை கைது செய்ய முயன்ற போது அவருக்கும் போராட்ட காரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மன்னார்குடி டி.எஸ்.பி. அசோகன் மற்றும் போலீசார் போராட்டம் நடத்திய 30 பேரையும் கைது செய்தனர்.