செய்திகள்

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த முதியவர் உயிரிழப்பு

Published On 2018-12-24 14:28 GMT   |   Update On 2018-12-24 14:28 GMT
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 65 வயது முதியவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி:

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 65 வயது முதியவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாததால், உறவினர்கள் யாருமின்றி தனியாக வந்து சிகிச்சையில் சேர்ந்தார். 4-ந் தேதி முதல் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் அனுமதி பதிவேட்டில் அவர், திருச்சி சுப்பிரமணியபுரம் ரெங்காநகரை சேர்ந்த சூசைராஜ் (வயது 65) என பதிவு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த முகவரி தவறானது என்று தெரியவந்தது. இறந்த முதியவர் வெள்ளை நிற வேஷ்டி மட்டுமே அணிந்துள்ளார். அவர் குறித்த வேறு எந்த தகவலும் தெரியவில்லை. 

இது குறித்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் மற்றும் கே.கே.நகர் போலீசார், இறந்த நபரின் புகைப்படத்தை வைத்து அவர் யார்? எதற்காக தவறான முகவரி அளித்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News