செய்திகள்

பரமத்திவேலூர் அருகே ராஜவாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி

Published On 2018-12-24 07:24 GMT   |   Update On 2018-12-24 07:24 GMT
பரமத்திவேலூர் அருகே ராஜவாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

கரூர், வடிவேல் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் யோகேஸ் (வயது 19).

இவர் திருச்சியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கல்லூரி விடுமுறையையொட்டி யோகேஸ் நேற்று மாலை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜோடர்பாளையம் தடுப்பணையில் உள்ள ராஜவாய்க்காலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது யோகேஸ் ஆழமான பகுதிக்கு சென்றார். அந்த பகுதியில் தண்ணீரின் வேகமாக அதிகமாக இருந்தால் யோகேசை இழுத்துச் சென்றது. அவருடன் ராஜவாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த நண்பர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் யோகேசை வெகு நேரமாக தேடினர். ஆனால் இருட்டாக இருந்ததால் யோகேசை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து அவரது பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். ஜோடர்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும், அப்பகுதி மீனவர்களும் அங்கு வந்து ராஜவாய்க்காலில் இறங்கி பரிசல்கள் மூலமாக தேடினார்கள்.

அப்போது யோகேஸ் பிணமாக மிதந்ததை கண்டுபிடித்தனர். உடலை மீட்டு மீனவர்கள் பரிசல் மூலமாக கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடல் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News