செய்திகள்

கஜா புயலால் பாதிப்பு - மின்சாரம் வழங்காததை கண்டித்து செல்போன் டவரில் ஏறி மக்கள் போராட்டம்

Published On 2018-12-21 10:35 GMT   |   Update On 2018-12-21 10:35 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கூத்தாநல்லூர் பகுதிகளில் மின்சாரம் வழங்காததை கண்டித்து செல்போன் டவரில் ஏறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone
கூத்தாநல்லூர்:

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே செருவாமணி ஊராட்சியில் தாமரைபள்ளம் கிராமம் உள்ளது, இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்,

இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்தது. ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல கிராமங்களில் மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

இதேபோல் தாமரைக்குளம் கிராமமும் புயலால் பாதிக்கப்பட்டது. புயல் தாக்கி 35 நாட்களாகியும், தாமரைக்குளம் கிராமத்துக்கு இன்னும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் மின்சாரம், குடிநீர் கேட்டு ஆங்காங்கே அந்த கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விரைவில் மின்சாரம் வழங்ககோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்குள்ள 200 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்,

இதுபற்றி தகவல் கிடைத்ததும் வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், புயல் சேதமதிப்பீடு கணக்கெடுக்க கூட எந்த அதிகாரிகளும் இங்கு வரவில்லை. எனவே வருவாய்த்துறை அதிகாரிகளும் மின்வாரிய அதிகாரிகளும் உடனடியாக வந்து மின் இணைப்பை வழங்கவும், நிவாரண உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருவாரூர், சப்-கலெக்டர் பால்துரை, கூத்தாநல்லூர் தாசில்தார் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 5 நாட்களில் கிராமத்துக்கு மின்சாரம், வழங்கப்படும் என்றும் மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு உங்கள் கோரிக்கை கொண்டு சென்று அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தனர்.

இதற்கிடையே செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதாக தாமரைபள்ளம் கிராமத்தை சேர்ந்த அந்தோணி உள்பட 8 பேர் மீது வடபாதிமங்கலம் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றார். #GajaCyclone
Tags:    

Similar News