கடலூர் நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கடலூர்:
கடலூர் நகராட்சியில் தண்ணீரை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை சுத்திகரிக்கும் பொறுப்பினை மட்டும் தனியார் நிறுவனத்திற்கு வழங்கி குடிநீர் கட்டணம் வசூலிக்கும் டெண்டரை ரத்து செய்ய கோரியும், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தரமான குடிநீரை அனைத்து இடங்களிலும் கிடைக்க நகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி குடங்களுடன் கடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் உதயகுமார், ரமேஷ், பூபதி கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி குடம் மற்றும் மண் பானைகள் கொண்டுவந்து நகராட்சிக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
அப்போது திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் வைத்திருந்த மண் குடத்தை சாலையில் போட்டு உடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதில் மாநில குழு உறுப்பினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்புராயன் மாவட்ட குழு உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இதில் ஸ்டாலின் பால்கி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.