செய்திகள்

கள்ளகுறிச்சியில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2018-12-19 11:33 GMT   |   Update On 2018-12-19 11:33 GMT
வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளகுறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி அருகே உள்ள புது உச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் விவசாயி. இவரது மனைவி அலமேலு(வயது23). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று சொந்த வேலை காரணமாக செல்வம் வெளியூருக்கு சென்று விட்டார்.

அலமேலு தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு உணவை முடித்து விட்டு அலமேலு அவரது குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

இதை நோட்டமிட்ட மர்மமனிதர்கள் சிலர் நள்ளிரவில் அலமேலுவின் வீட்டிற்குள் புகுந்தனர்.

பின்னர் அவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அலமேலுவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கலியை பறித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு அலமேலுவின் குழந்தை கதறி அழுதது.

இந்த சத்தம் கேட்டு அலமேலு கண் விழித்தார். அழுது கொண்டிருந்த குழந்தையை சமதான படுத்தினர். அப்போது அவர் தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பார்த்தார். அதை காணவில்லை. அப்போது தான் சங்கிலி திருடு போயிருப்பது அலமேலுவுக்கு தெரிய வந்தது.

பின்னர் அவர் திருடன்...திருடன்...என அலறினார் . அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்களிடம் நகை திருடு போன சம்பவத்தை கூறினார்.

உடனே அந்த பகுதி பொதுமக்கள் திருடர்களை அந்த பகுதியில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மர்ம மனிதர்கள் திருடி சென்ற நகையின் மதிப்பு ரூ1½ லட்சம் ஆகும்.

இது குறித்து வரஞ்சரம் போலீசில் அலமேலு புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகிறார்.

Tags:    

Similar News