செய்திகள்

பாலியல் பலாத்கார வழக்கு- திருவண்ணாமலை கோர்ட்டில் ரஷிய பெண் மீண்டும் ஆஜர்

Published On 2018-12-18 09:35 GMT   |   Update On 2018-12-18 09:35 GMT
பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக திருவண்ணாமலை கோர்ட்டில் ரஷிய பெண் மீண்டும் ஆஜரானார். அப்போது வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் ரஷிய நாட்டை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கீழ்பென்னாத்தூர் வேடநத்தம் பகுதியை சேர்ந்த நீலகண்டன் (வயது 35), அவரது தம்பி பாரதி (31), திருவண்ணாமலை செங்கம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (37), பாவாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் (30) ஆகியோரை திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 14-ந் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ரஷிய பெண் கோர்ட்டில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை கூறினார். பின்னர் வழக்கு விசாரணையை 17-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதனையடுத்து நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நீலகண்டன், பாரதி, மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் நீதிபதி தேவநாதன் விசாரணை நடத்தினார்.

மேலும் வழக்கு விசாரணை தொடர்பாக ரஷிய பெண் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடமும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News