செய்திகள்
கடையம் அருகே இளம்பெண் தற்கொலை- உதவி கலெக்டர் விசாரணை
கடையம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடையம்:
கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி பூபதி (வயது 20). பாலமுருகன் கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று பூபதி வீடு காலை அதிகநேரம் ஆகியும் பூட்டி கிடந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த பாலமுருகனின் அக்காள் வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டில் பூபதி இறந்து கிடந்தார். அவர் அருகில் சென்று பார்த்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனைக்காக பூபதி உடலை போலீசார் அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் பூபதி தற்கொலைக்கான காரணம் குறித்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.