செய்திகள்

வாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவர் சுழலில் சிக்கி மூழ்கி பலி

Published On 2018-12-17 04:05 GMT   |   Update On 2018-12-17 04:05 GMT
பெருந்துறை அருகே வாய்க்காலில் குளித்தபோது சுழலில் சிக்கி பலியான கல்லூரி மாணவர் உடலை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர், மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர் என்பவரது மகன் ரவீந்திரன்(வயது 20). இவர் பெருந்துறை அருகேயுள்ள ஒரு தனியார் என்ஜினியிரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு ஈசிஈ படித்து வந்தார்.

ரவீந்திரன் தனது தாயார் செல்வி, தந்தை மற்றும் தங்கை மைவிழி ஆகியோருடன் பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி, பாலக்கரை பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் துணிதுவைத்துவிட்டு குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அங்கு தனது குடும்பத்தினர் துணி துவைத்து கொண்டிருந்தபோது ரவீந்திரன் வாய்க்காலுக்குள் இறங்கி குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறிய அவர் தண்ணீரின் சுழலில் சிக்கி நீரில் மூழ்கி விட்டார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் வாய்க்காலில் குதித்து அவரை தேடி பார்த்தனர்.

கல்லூரி மாணவர் உடலை அங்குள்ளவர்கள் நீண்ட நேரம் தேடினர். உடல் உடனடியாக கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து தேடினர்.

அவரது உடல் சுழலில் சிக்கி அருகே கரை ஒதுங்கி இருந்தது. 5 மணி நேரத்துக்குப்பிறகு மாலை 5 மணிக்கு அவரது உடல் கிடைத்தது.

அவரது உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News