செய்திகள்

எச்.ராஜாவை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தையினர் சாலை மறியல்

Published On 2018-12-15 10:39 GMT   |   Update On 2018-12-15 10:39 GMT
திருமாவளவனை விமர்சித்து பேசிய எச்.ராஜாவை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தையினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை விமர்சித்து பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசி இருந்தார்.

இதை கண்டித்தும், அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுவை - விழுப்புரம் சாலையில் மூலகுளத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு உழவர்கரை தொகுதி செயலாளர் தீந்தமிழன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அன்பரசன், விடுதலை வளவன், ஆற்றல் அரசு, அங்காளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

15 நிமிடத்திற்கும் மேலாக மறியல் செய்ததால் அப்பகுதியில் போக்கவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட சுமார் 45 பேரை கைது செய்தனர்.

இதுபோல் தவளகுப்பம், புதுவை- கடலூர் சாலை 4 முனை சந்திப்பில் வி.சி.க. வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொகுதி செயலாளர் வெண்மணி தலைமை தாங்கினார். சுடர்வளவன், இன்பதமிழன், புரட்சி வளவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், தமிழ்வளவன், உள்ளிட்ட 150 பேர் இதில் கலந்து கொண்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீ சார் அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும் அங்கிருந்த வர்களுக்கும் தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து தவளகுப்பம் போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இந்த திடீர் மறியலால் கடலூர்- புதுவை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் பைபாஸ் ரவுண்டானா அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் விழுப்புரம் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் தமிழ்மொழி தலைமை தாங்கினார்.

தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட துணை செயலாளர் பாவலன் முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News