வடமதுரை அருகே மர்ம காய்ச்சலுக்கு 100 பேர் பாதிப்பு
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சுற்றி ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. அதாவது வி.சித்தூர், செங்குளத்துப்பட்டி, காணப் பாடி, மோர்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஏராள மானோர் விவசாயத்தை நம்பியுள்ளனர்.
இவர்களுக்கு மழை பெய் தால்தான் வேலை கிடைக்கும். இல்லையென்றால் கூலி தொழிலை நம்பிதான் பிழைப்பு நடத்துகின்றனர். கடந்த சில நாட்களாக மோர்பட்டி பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இந்த காய்ச்சல் கண்டவர்கள் உடல் சோர்வுடன் கைகால் வலியுடன் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலால் ஒரே கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டுக்கு வீடு காய்ச்சல் பாதிப்பு இல்லாதவர்கள் இல்லை என்றே சொல்லும் அளவுக்கு மர்ம காய்ச்சல் கிராமத்தை ஆட்டுவிக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கரிவாடன்செட்டிபட்டியைச் சேர்ந்த மின் ஊழியர் நடராஜன் என்பவர் மர்ம காய்ச்சலுக்கு இறந்துள்ளார். இந்த தகவலை அறிந்த மோர்பட்டி கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்ற பீதியில் உள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், மோர்பட்டியில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியபடி காணப்படுகிறது. இதனால் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகிறது. சாக்கடை போல் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிகாரிகளின் மெத்தனத்தால் எங்களது கிராமங்களில் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.