செய்திகள்

வில்லுக்குறி அருகே விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி நசுங்கி பலி

Published On 2018-12-14 13:29 GMT   |   Update On 2018-12-14 13:29 GMT
வில்லுக்குறி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி உடல் நசுங்கி பலியானார்.
இரணியல்:

நாகர்கோவில் பார்வதிபுரம் கட்டயன்விளை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவரது மனைவி அமுதா (50). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

முருகன் நேற்று மனைவி அமுதாவுடன் மோட்டார் சைக்கிளில் தக்கலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மாலை இருவரும் வீடு திரும்பினார்கள். வில்லுக்குறி அருகே காரவிளை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். முருகன் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து இரணியல் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் பேபி தங்கம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அரசு பஸ் டிரைவர் கொட்டாரத்தை சேர்ந்த தங்கப்பன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். கணவன் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமுதா பலியானது பற்றி தகவல் அறிந்ததும் மகன், மகள்கள் கதறி அழுத்தனர்.

பலியான அமுதாவின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.   
Tags:    

Similar News