சிதம்பரம் அருகே குடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்த 2 பேர் கைது
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி அருகே உள்ள வெளத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்குமரன்(வயது25). அதேபகுதியை சேர்ந்தவர் கமல்ராஜ்(28). இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் மது குடித்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டை பகுதியில் நடுரோட்டில் நின்றுகொண்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர்.
மேலும் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லவிடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட தமிழ்குமரன், கமல்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை காட்டுமன்னார்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிதம்பரம் கிளை சிறையில் அடைத்தனர்.