செய்திகள்

அரக்கோணம் அருகே தீயில் கருகி இளம்பெண் பலி: கணவர்-மாமியார் மீது புகார்

Published On 2018-12-14 11:08 GMT   |   Update On 2018-12-14 11:08 GMT
அரக்கோணம் அருகே திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆன இளம்பெணி தீயில் கருகி பலியான சம்பவம் தொடர்பாக கணவர், மாமியார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம்:

அரக்கோணம் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி தேவி (28). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது.

தேவி நேற்று வீட்டில் இருந்தபோது உடலில் தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தேவியின் அண்ணன் தேவராஜ் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் எனது தங்கையை அவரது கணவர், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்தனர். என் தங்கை மீது மண்எண்ணை ஊற்றி கொளுத்திவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News