காட்பாடி அருகே ரெயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு
ஜோலார்பேட்டை:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடாசலம் தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ராகினி (வயது 65). கணவன்-மனைவி இருவரும் கோவையில் நடைபெறும் யோகா பயிற்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் வெஸ்ட்கோட்ஸ் ரெயிலில் சென்றுள்ளனர்.
காட்பாடி ரெயில்நிலையத்தில் நின்று பயணிகள் இறங்கியதும் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. இந்த நேரத்தில் ராகினி பயணம் செய்த அதே பெட்டியில் பயணம் செய்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி, ராகினி கழுத்தில் கிடந்த 16 பவுன் செயினை பறித்துக்கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பிச்சென்றுவிட்டார். ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்குவந்ததும் இதுபற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ராகினி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமியை தேடிவருகிறார்.