துப்பட்டாவை கழுத்தில் சுற்றி விளையாடிய மாணவன் உயிரிழப்பு
ஆலந்தூர்:
மடிப்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் சங்கர். இவரது மகன் திருக்கார்த்திக்கேயன்(வயது 12) நங்கநல்லூரியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த திருக்கார்த்திகேயன் அறையில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது தாயின் துப்பட்டாவை துணிகள் தொங்கவிடும் கம்பியில் போட்டு விட்டு மறுமுனையை தனது கழுத்தில் சுற்றி விளையாடினான்.
இதனை அவனது தாய் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் விளையாட்டாக சுற்றிய துப்பட்டா திருக்கார்த்திகேயனின் கழுத்தை இறுக்கியது. இதில் அவன் மயங்கி விழுந்தான்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் கூச்சலிட்டார். திருக்கார்த்திகேயனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.டாக்டர்கள் பரிசோதித்த போது திருக்கார்த்திகேயன் ஏற்கனவே இறந்து விட்டது. தெரிந்தது. அவனது உடலை கண்டு பெற்றோர் கதறி அழுந்தது பரிதாபமாக இருந்தது.
அவனுக்கு இன்று அரையாண்டு தேர்வு தொடங்க இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.