காட்பாடியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
வேலூர்:
காட்பாடி சில்க்மில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவரது மனைவி சாந்தி (வயது 45). காட்பாடி பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்துள்ளனர்.
நேற்று இரவு 11.30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.தாயுமானவர் தெருவில் சென்றபோது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் திடுக்கிட்ட தம்பதி கூச்சலிட்டனர்.
அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக காட்பாடி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காட்பாடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து பெண்களை கட்டிப்போட்டு 35 பவுன் நகையை வடமாநில கும்பல் கொள்ளையடித்து சென்றனர். தொடர் சம்பவங்களால் காட்பாடியில் திருட்டு பீதி ஏற்பட்டுள்ளது.