கோவை அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலி
சூலூர்:
கோவை சூலூர் காங்கேயம் பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 22). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி., இறுதி ஆண்டு படித்து வந்தார். தினமும் அதிகாலையில் புறப்பட்டு பீளமேடு காந்திமாநகரில் உள்ள 2 மாணவர்களுக்கு டியூசன் எடுப்பார். பின்னர் கல்லூரிக்கு செல்வது வழக்கம். இன்று அதிகாலை காங்கயம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
சூலூர் பெரியகுளம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே அப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சுரேஷ் வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதின. இதில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர் சதீஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிங்காநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷ் லேசாக காயத்துடன் தப்பினர்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.