செய்திகள்
கைதான நல்லான்

சாப்பாடு கொடுக்காததால் 2 பேரை கொன்றேன் - கைதான கொலையாளி வாக்குமூலம்

Published On 2018-12-04 14:34 GMT   |   Update On 2018-12-04 14:34 GMT
அந்தியூரில் சாப்பாடு கொடுக்காததால் கோவிலில் படுத்து தூங்கிய 2 பேரை அடித்து கொன்றதாக கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்தியூர்:

அந்தியூரை அடுத்த ஆத்தப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லான் என்கிற நல்லசாமி.

நேற்று முன்தினம் இரவு, அந்தியூரை அடுத்த கொன்ன மரத்தையன்கோவில் வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த வெள்ளை பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த வடிவேல், டி.என். பாளையத்தை சேர்ந்த கந்த சாமியை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தான்.

கொலையாளி நல்லானை கைது செய்த அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனக்கு மனைவி இல்லை. நான் தனியாக வசித்து வருகிற காரணத்தினால், எனக்கு சாப்பிட உணவு கிடைப்பதில்லை.

சாப்பாடு கேட்டு எங்கள் ஊரிலும் மற்ற பகுதிகளிலும் பலரிடம் சென்றேன். ஆனால் அவர்கள் எனக்கு உணவு வழங்க மறுத்து விட்டனர்.

சம்பவத்தன்று இரவு கோவிலில் இருந்த கந்தசாமியிடமும் வடிவேலிடமும் சாப்பாட்டுக்கு பணம் கேட்டேன். அவர்கள் இல்லை என்று கூறிவிட்டனர்.

மேலும் கோவிலுக்கு பக்கத்து வீடுகளில் இருந்தவர்களிடமும் சாப்பாடு கேட்டேன் அவர்களும் இல்லை என்று துரத்தி விட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த நான் எங்கள் வீட்டிற்கு சென்று மூங்கில் கம்பை கொலை செய்யும் எண்ணத்தில் எடுத்து வந்தேன்.

அங்கு நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கந்தசாமி, வடிவேலுவை மூங்கில் கம்பு மற்றும் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்றேன்.

சந்தியாபாளையத்தை சேர்ந்த பெரியசாமியை அடித்தபோது அவர் தப்பி சென்று ஒளிந்து கொண்டார். அதன்பிறகு ஆத்திரம் குறையாத நான் எங்கள் பகுதியை சேர்ந்த குமாரையும் கத்தியால் குத்தினேன். சாப்பாடு கிடைக்கவில்லை என்ற வெறியால் இதை செய்தேன்.

இவ்வாறு வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News