செய்திகள்
காலாப்பட்டில் வீட்டில் இருந்த பட்டதாரி பெண் மாயமானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:
புதுவை பெரிய காலாப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாந்த குமார். இவர் வீட்டிலேயே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சந்திரலேகா (வயது 20). இவர் பி.எஸ்.சி. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சாந்தகுமார் தனது மனைவியுடன் பெட்டிக் கடைக்கு தேவையான பொருட்கள் வாங்க மார்க்கெட்டுக்கு சென்றார். வீட்டில் சந்திரலேகா மட்டும் தனியாக இருந்தார்.
பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பிய போது சந்திரலேகாவை காணாமல் சாந்தகுமார் திடுக்கிட்டார். உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் சந்திரலேகா இல்லை.
இதையடுத்து சாந்தகுமார் தனது மகள் மாயமானது குறித்து காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சந்திரலேகாவை தேடி வருகிறார்கள்.