செய்திகள்

மதுரையில் போலீஸ் போல் நடித்து வயதான தம்பதியிடம் 7 பவுன் கொள்ளை

Published On 2018-12-01 10:31 GMT   |   Update On 2018-12-01 10:31 GMT
மதுரையில் வயதான தம்பதியிடம் போலீஸ் போல் நடித்து 7 பவுன் நகையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 85). இவரது மனைவி செந்தூர்கனி (80) இவர்களது மகன் துரைராஜ் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள புதுராம்நாட் ரோடு மீனாட்சி நகரில் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோசப், செந்தூர் கனி மதுரையில் உள்ள மகன் வீட்டுக்கு வந்த னர். நேற்று காலை இருவரும் தெப்பக்குளம் சித்திவிநாயகர் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது வேட்டி அணிந்து நடுத்தர வயதுடைய 2 பேர் அங்கு வந்து தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

பின்னர் இந்த பகுதியில் கொள்ளை, வழிப்பறி அதிகமாக நடந்து வருகிறது. எனவே நகையை அணிந்து செல்ல வேண்டாம் என மர்ம நபர்கள் கூறியுள்ளனர். மேலும் செந்தூர்கனி அணிந்திருந்த 6 பவுன் நகை, ஜோசப்பின் ஒரு பவுன் செயினை கொடுங்கள். பேப்பரில் மடித்து தருகிறேன். பத்திரமாக வைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

இதை நம்பிய வயதான தம்பதி தங்களிடம் இருந்த 7 பவுன் நகையை கழற்றி கொடுத்தனர். அவர்கள் நகையை பேப்பரில் மடித்து கொடுப்பது போல் கூழாங்கற்களை வைத்து கொடுத்துவிட்டு சென்றனர்.

இதனை அறியாத தம்பதியினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நகைக்கு பதிலாக கூழாங்கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்களது மகன் துரைராஜ் தெப்பக் குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News