மயிலாடுதுறை அருகே 10-வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழன் பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அதே பகுதியை சேர்ந்த 10-வகுப்பு மாணவிக்கும், சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று காலை திருமண நடைபெற இருப்பதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சிவகுமாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை குழந்தைகள் நலக்குழுவை சேர்ந்த ரம்யா, கிரிஜா மற்றும் மயிலாடுதுறை மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருமணத்துக்கு தயாராக இருந்த மாணவியை மீட்டனர்.
மேலும் சிறுமியை திருமணம் செய்ய முயன்ற சென்னையை சேர்ந்த சண்முகம் மகன் சுரேஷ் (வயது 30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் டிரைவராக பணி புரிந்து வருவது தெரியவந்தது.
மீட்கப்பட்ட சிறுமி போலீசாரின் பாதுகாப்பில் உள்ளார். இந்த குழந்தை திருமணத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் யார் யார்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.