செய்திகள்

திண்டுக்கல் அருகே காவலாளியை கட்டிப்போட்டு பள்ளியில் கொள்ளை

Published On 2018-11-27 17:33 IST   |   Update On 2018-11-27 17:33:00 IST
திண்டுக்கல் அருகே காவலாளியை கட்டிப்போட்டு பள்ளியில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில் சிலுக்குவார்பட்டியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முருகன் (வயது40) என்பவர் காவலாளியாக உள்ளார்.

நேற்று இரவு இவர் பணியில் இருந்தபோது 3 மர்ம நபர்கள் அவரிடம் விலாசம் கேட்பதுபோல வந்தனர். பின்னர் திடீரென அவரை தாக்கி கீழே தள்ளினர்.

மேலும் முருகனை பள்ளி கேட் முன்பு கட்டிப்போட்டு விட்டு உள்ளே புகுந்தனர். அலுவலக அறையில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், கேமரா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அள்ளிச் சென்றனர்.

இன்று காலையில் அவ்வழியே வந்த மக்கள் முருகனின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது அலுவலக அறையில் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்தனர்.

காயம் அடைந்த முருகனை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். கொள்ளைபோன பொருட்களின் முழு விவரம் தெரியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News