செய்திகள்

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார்

Published On 2018-11-27 17:05 IST   |   Update On 2018-11-27 17:05:00 IST
சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். #PeriyarUniversity #Banwarilalpurohit
கருப்பூர்:

சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் 18-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக கவர்னரும், பல்கலைக் கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குவதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு வந்தார்.

அப்போது கவர்னருக்கு விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ரோகிணி புத்தகம் கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு வந்தார்.

விழாவில் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் ஆண்டறிக்கை வாசித்து, வரவேற்று பேசினார்.


இதனை தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மற்றும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உறுப்பு கல்லூரி மாணவ- மாணவிகள் என 49 ஆயிரத்து 534 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் பட்டமளிப்பு விழாவுரை நிகழ்த்தினார். இதில் கலெக்டர் ரோகிணி மற்றும் பதிவாளர் பேராசிரியர் கு.தங்கவேல் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக கவர்னர் வருகையையொட்டி சேலம் மாநகர காவல் துறை சார்பில் கவர்னர் வரும் வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. #PeriyarUniversity #Banwarilalpurohit
Tags:    

Similar News