செய்திகள்

திருப்பூரில் கள்ளகாதலியை அரிவாளால் வெட்டிய காதலன்

Published On 2018-11-26 13:03 GMT   |   Update On 2018-11-26 13:03 GMT
பேச மறுத்த கள்ளகாதலியை அரிவாளால் வெட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் அனுப்பர் பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். பாத்திர தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா தேவி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் மஞ்சுளா தேவிக்கும் அனுப்பர் பாளையம் கஸ்தூரிபா நகரை சேர்ந்த பாத்திர தொழிலாளி சுரேஷ் (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்த விவரம் மஞ்சுளா தேவியின் கணவர் கணேசனுக்கு தெரிய வந்தது. அவர் மனைவியை கண்டித்தார். சுரேசிடம் உள்ள தொடர்பை துண்டித்து விடு என தெரிவித்துள்ளார். மேலும் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மஞ்சுளா தேவி மனம் திருந்தினார். கடந்த 2 மாதமாக அவர் சுரேசிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். சுரேஷ் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் மஞ்சுளா தேவி அவரிடம் பேசவில்லை.

இதனால் சுரேஷ் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று மஞ்சுளா தேவி தனது கணவர் கணேசனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். 15 வேலம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ் அவர்களை வழி மறித்தார். அவர் மஞ்சுளா தேவியிடம் எதற்காக என்னிடம் பேச மறுக்கிறீர்கள்? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் தகராறு உருவானது. ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் வைத்திருந்த அரிவாளால் மஞ்சுளா தேவியை வெட்டினார்.

இதனை கணேசன் தடுக்க முயன்றார். அவருக்கும் வெட்டு விழுந்தது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டனர். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் காயம் அடைந்த கணவன்-மனைவியை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து 15 வேலம் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News