செய்திகள்
மர்மமாக இறந்த செல்வராஜ்

ஆத்தூர் அருகே வேட்டைக்கு சென்ற விவசாயி சுட்டுக் கொலை? போலீசார் விசாரணை

Published On 2018-11-24 11:39 GMT   |   Update On 2018-11-24 11:39 GMT
ஆத்தூர் அருகே வேட்டைக்கு சென்ற விவசாயி துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை கலக்காம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற செல்வராஜ் (வயது 45).விவசாயி.

இவர் தனது நண்பர்கள் பெரியசாமி, பாண்டி, ஆண்டி ஆகியோருடன் கருமந்துறை மலைப்பகுதிக்கு வேட்டைக்கு செல்வது வழக்கம்.

அங்கு மான், காட்டுப்பன்றி, மற்றும் வன விலங்குகளை வேட்டையாடி வருவார்கள். நேற்று இரவு இவர்கள் 4 பேரும் கல்வராயன் மலை, கரியகோவில் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மோடூர் மலைக்கிராமத்திற்கு வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சென்றனர்.

அவர்கள் புதர் மறைவில் இருந்து வனவிலங்குகளை கண்காணித்தனர்.

அப்போது செல்வராஜ் முதுகில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். உடனே செல்வராஜியின் நண்பர்கள் 3 பேரும் அவரது உடலை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவரது வீட்டு முன்பு பிணத்தை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கரியகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரெண்டு சூரியமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். செல்வராஜியின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வேட்டைக்கு சென்ற செல்வராஜ் எப்படி குண்டு பாய்ந்து இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. புதர் மறைவில் இருந்து வனவிலங்கை சுடும்போது தவறுதலாக அவர் மீது குண்டு பாய்ந்து இறந்தாரா? அல்லது அவருடன் சென்ற நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டாரா? கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக் கட்டப்பட்டாரா? என்பது புரியாத புதிராக உள்ளது.

செல்வராஜியின் உடலை அவரது வீட்டு முன்பு போட்டு சென்ற நண்பர்கள் பெரியசாமி, பாண்டி, ஆண்டி ஆகிய 3 பேரும் குடும்பத்தினரிடம் எதுவும் சொல்லாமல் தலை மறைவாகி விட்டனர்.

இதுவும் போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.நண்பர்கள் சிக்கினால் தான் செல்வராஜ் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.

மர்மமாக இறந்த செல்வராஜிக்கு சரோஜா என்ற மனைவியும், ராமமூர்த்தி (9), சத்யமூர்த்தி (8), ஜெயவேல் (7) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் செல்வராஜியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இச்சம்பவம் கருமந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News