செய்திகள்

சென்னை, வடதமிழகத்தில் பலத்த மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

Published On 2018-11-22 06:21 GMT   |   Update On 2018-11-22 06:21 GMT
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த பகுதி வலுவடையாமல் அதே நிலையில் நீடித்து வருவதால் வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #IMD
சென்னை:

தென்மேற்கு வங்கக்கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டு இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்த பகுதி மேலும் வலுவடையாமல் அதே நிலையில் நீடித்து வருகிறது.

இது மேலும் நிலப்பகுதியில் நிலவி வருவதால் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்கிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய கன மழை பெய்தது.

வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில் உருவான வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை மற்றும் புதுச்சேரிக்கு அருகில் நிலவி வருகிறது.

இது நிலப்பகுதியில் நிலவுவதால் தொடர்ந்து மழை பெய்யக்கூடும். காற்று அதிகம் இல்லாமல் மழை நின்று பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.



மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு மேல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி ஒன்றும் உள்ளது. இதன் காரணமாகவும் வட மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.

வட கடலோர பகுதிகளில் அநேக இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மழை விட்டு விட்டு பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.

இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த மழை இன்றும் நீடித்து வருகிறது. சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெளியேற முடியாமல் வெள்ளம் போல் காட்சியளிக்கின்றன. காற்று இல்லாமல் மழை நின்று பெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

ஒரே நேரத்தில் கன மழை பெய்து அந்த தண்ணீர் கடலுக்குள் வீணாக சேருவதை காட்டிலும் தற்போது பெய்து வரும் மழை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் 10 செ.மீ., சென்னை, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் 9 செ.மீ., தாம்பரம், திருத்தணி தலா 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. #Rain #IMD

Tags:    

Similar News