செய்திகள்

பூந்தமல்லி அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 5 பேர் கைது

Published On 2018-11-21 09:11 GMT   |   Update On 2018-11-21 09:11 GMT
பூந்தமல்லி அருகே சவாரி ஏற்றும் தகராறில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:

பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோட்டு என்கிற சத்தியகிரிராவ் (வயது30). ஷேர் ஆட்டோ டிரைவர்.

இவர் ஆவடியில் உள்ள ஒரு ஆட்டோ நிறுத்தும் இடத்தில் சங்க செயலாளராக இருந்து அங்கேயே ஆட்டோ ஓட்டி வந்தார்.

நேற்று முன்தினம் மாலை பாரிவாக்கம் கங்கையம்மன் கோவில் குளம் அருகே நண்பர்களுடன் மது அருந்திய சத்தியகிரிராவை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆட்டோக்களில் சவாரி ஏற்றும் தகராறில் சத்தியகிரிராவ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக ஆட்டோ டிரைவர்களான அம்பத்தூர் ஒரகடத்தைச் சேர்ந்த பூபாலன், சென்னீர்குப்பம் கபீர், பாலாஜி, திருமுல்லைவாயல் ஜார்ஜ் விஜய்பாபு, ஆவடியைச் சேர்ந்த அஜித் என்கிற ஜெகன்நாதன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News