செய்திகள்

புயல் பாதித்த பகுதிகளில் நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

Published On 2018-11-17 08:39 GMT   |   Update On 2018-11-17 08:39 GMT
கடலோர மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார். #GajaCyclone #TNCM #EdappadiPalaniswami
சேலம்:

சேலம் வனவாசியில் இன்று நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகள், கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு துறைகளின் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இதற்காக வனவாசிக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கஜா புயலால் கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயலால் பல்வேறு பகுதிகளில் 1 லட்சத்து 27 ஆயிரம் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

புயலுக்கு முன்னதாகவே 82 ஆயிரம் பேரை நிவாரண முகாம்களில் தங்க வைத்ததால் பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது 371  நிவாரண முகாம்களில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

70 கால்நடைகள், 297 செம்மறி ஆடுகள், 188 ஆடுகள், 30 காட்டுவிலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  அவற்றை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த புயலால் 105 துணை மின்நிலையங்கள் சேதமடைந்துள்ளது, அவற்றை சீரமைக்கும் பணிகளில் சுமார் 10 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தொற்று நோய்கள் பராவமல் தடுப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


புயல் பாதித்த இடங்களில் எந்த பகுதியிலும் உணவு தட்டுப்பாடு இல்லை. மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TNCM #EdappadiPalaniswami
Tags:    

Similar News