செய்திகள்

ஆசிரியர்கள் இல்லாததால் கணினி பாடம் நடத்தப்படவில்லை- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Published On 2018-11-15 07:18 GMT   |   Update On 2018-11-15 07:18 GMT
தமிழ்நாட்டில் 750 அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் கணினி பாடம் நடத்தப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். #TNGovernmentSchool #Anbumaniramadoss
சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் அடுத்த மாதம் 10-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 750 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாத நிலையில், அப்பாடத்திற்கு தேர்வுகளை நடத்துவதன் மூலம் அரசு புதிய கல்விப் புரட்சி படைக்கிறது.

மாணவர்களின் கல்வித் தேவையை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளாவது மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தால் தான் தரம் உயர்த்தப்பட்டது அர்த்தமுள்ளதாக அமையும்.

ஆனால், அரசு உயர் நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதாக பேரவையில் அறிவித்துவிட்டு, அப்பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது தான் அவர்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம் ஆகும். அவ்வாறு 2016-17-ம் ஆண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் 809 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் அங்கு கணினி அறிவியல் பாடம் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கணினி அறிவியல் என்றால் என்ன என்பது கூட தெரியாமல் அப்பாடத்தின் தேர்வை எழுதும் மாணவனால் எதை சாதிக்க முடியும்? அம்மாணவன் எவ்வாறு தேர்ச்சி பெற்று உயர்கல்விக் கற்கச் செல்வான்? ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவை கல்வி ஆகும்.

அதனால், மாநிலத்தை முன்னேற்ற வேண்டும் என்று நினைக்கும் அரசு, மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆனால், கல்வி குறித்தோ, மாநிலத்தின் வளர்ச்சி குறித்தோ எந்த தொலைநோக்குப் பார்வையும் பினாமி அரசுக்கு இல்லாததால் தான் கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படாமல் கல்வித்துறை சீரழிகிறது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 748 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த போதிலும், அது இன்று வரை செயல்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதுகலை கணினி அறிவியல் ஆசிரியர் தகுதி பெற்று பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் நலன் கருதியும், மாணவர்கள் நலன் கருதியும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 809 கணினி ஆசிரியர் பணியிடங்களை முதலில் தற்காலிகமாகவும், நடப்புக் கல்வியாண்டு முடிவதற்குள் நிரந்தரமாகவும் அரசு நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார். #AnbuManiRamadoss
Tags:    

Similar News