செய்திகள்

கோவையில் கணவருடன் வந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2018-11-12 12:14 GMT   |   Update On 2018-11-12 12:14 GMT
கோவையில் கணவருடன் வந்த மூதாட்டியிடம் 12 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 70). இவரது மனைவி சாந்தகுமாரி (65). சம்பவத்தன்று இருவரும் கோவை ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக காரில் புறப்பட்டனர்.

காரை மண்டபம் எதிரே நிறுத்தி விட்டு தம்பதி மண்டபத்தை நோக்கி நடந்து வந்தனர்.

அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அதில் பின்னால் இருந்தவர் சாந்தகுமாரி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் கொண்ட 2 தங்க சங்கிலியை பறித்தனர்.

அதிர்ச்சியடைந்த தம்பதி சத்தம்போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உதவிக்கு வருவதற்குள் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.

இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News