வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலி
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே துத்திப்பட்டு இந்திரா நகரை சேர்ந்தவர் மணி (வயது 52). கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் பிட்டர் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் தொண்டமாநத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மணி மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட மணி தலையில் பலத்த காயம் அடைந்தார். அவர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று அவருக்கு விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சிகிச்சைக்காக மணியை அவரது குடும்பத்தினர் மீண்டும் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால், வழியிலேயே மணி பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் பலியான மணிக்கு ராந்துமரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.